ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!

முஸ்லிம்களின் 5 கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ். இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தல் கடமை பெற்றுள்ளது.

ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானின் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் ஈகைத் திருநாள், ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது

ரமலான் வந்துவிட்டால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் என்பதும், இல்லாதோருக்கு இருப்போர் உதவி செய்தல் என்பதும் அதிகரித்துவிடும்.

ரமலான் நோன்பு இருப்பவர்கள் முதல் பிறை கண்ட பின்னர் தான் தங்களது நோன்பை (விரதமிருத்தலை) தொடங்குகின்றனர்.

நோன்பு இருக்கும் 30 நாட்களும் சூரியன் உதிப்பதற்கு முன்பாக எழுந்து உணவு உண்ண வேண்டும். இந்த நேரத்தை சஹர் உடைய நேரம் என்று அழைக்கின்றனர்.

சூரியன் உதிக்கும் முன்பாக உணவு எடுத்த பின்னர், சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட பருகக் கூடாது. சூரியன் மறைந்த பின்னரே நோன்பு திறக்க வேண்டும்.

நோன்பு திறத்தலை இப்தார் என்று அழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். தாமதம் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள், நோயாளிகளை தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 7 வயது குழந்தைகளுக்கும் நோன்பு பிடிப்பதற்கு அனுமதி உண்டு. சிறுவர் - சிறுமிகள் நோன்பின்போது சோர்வடைந்தால், அந்த நேரத்தில் அவர்கள் நோன்பை திறந்து கொள்ளலாம். இதற்கு அவர்களது பெற்றோர்களின் கவனம் அதிகம் தேவை.

மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் பெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

சுபுஹீ எனப்படும் அதிகாலை தொழுகைக்கு முன்பு நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள், மஹ்ரிப் எனப்படும் மாலை நேர தொழுகைக்கு முன்பாக நோன்பு திறப்பது வழக்கம். சூரியன் அஸ்தமனம் மற்றும் உதய நேரங்களை கணக்கில் கொண்டு இந்த 2 நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படுகின்றது.

நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். புறம் பேசுதல், பொய் சொல்லுதல், பிறருக்கு துன்பம் விளைவித்தல், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.

நோன்பு இருக்கும் நேரத்தில் தவறான வார்த்தைகளையோ, தவறான செயல்களையோ பயன்படுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.


நோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது.நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

மாத்திரைகள்:

இந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.

இன்சுலின்கள்:

அபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

நோன்பு கஞ்சி வகைகள்:

ஓட்ஸ் பார்லி நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

1. ஓட்ஸ் - 50 கிராம்
2. அரைத்த பார்லி பவுடர்-இரண்டு டேபிள் ஸ்பூன்
3. ஆயில் - இரண்டு டேபிள் ஸ்பூன்
4. பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1
5. தக்காளி (நறுக்கியது) - 1
6. பச்சை மிளகாய் (கீறியது) - 2
6. வெந்தயம் - 1 டீஸ்பூன்
7. பட்டை - 1
8. பூண்டு - 2
9. நறுக்கிய புதினா - இரண்டு டேபிள் ஸ்பூன்
10. பால்- 1 டம்ளர்
11. உப்பு தேவைக்கேற்ப
12. சூப் செய்வதற்கேற்ற பாத்திரம்

செய்முறை

1. பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் நன்றாக வதக்கவும்.
2. வதக்கியதும் சுமார் 1 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்கும்பொழுது கீழ்கண்ட பொருட்களுடன் கொதிக்கவிடவும். ஓட்ஸ், தக்காளி மற்றும் அரைத்த பார்லி பவுடரை பச்சை தண்ணீரில் கட்டியில்லாமல் கலந்தது.
3. மிதமான சூட்டில் வைக்கவும்.
4. ஓட்ஸ் நன்றாக வெந்ததும் பால், உப்பு மற்றும் நறுக்கிய புதினா சேர்க்கவும்.
5. சுமார் 25 நிமிடம் மிதமான தீயில் கொதித்தால் சூப் பதத்திற்கு வரும்.
6. இப்பொழுது சுவையான, மருத்துவ குணம் நிறைந்த ஓட்ஸ் பார்லி நோன்பு கஞ்சி ரெடி.

மருத்துவ குறிப்பு

சர்க்கரை, இதய கோளாறு மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.

நன்றி: அபூஹூதைஃபா



சிம்பிள் நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள் ;

பச்சரிசி – 100 -150 கிராம்
வெந்தயம் – அரைடீஸ்பூன்
சீரகம் –அரைஸ்டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன் (விரும்பினால்)
பூண்டு – 4-6 பல்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
ரம்பை இலை- சிறிது
மல்லி ,புதினா,கருவேப்பிலை – சிறிது
தேங்காய்ப்பால் –பாதி காயில்.
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு.

முதலில் அரிசியை தண்ணீரில் கழைந்து எடுத்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.சீரகம் வெந்தயம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,பூண்டு பொடியாக அரிந்து கொள்ளவும்.

பின்பு குக்கரில் 750 மில்லி தண்ணீர் வைத்து அரிசியை போட்டு கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் முழுதாய்,மல்லி புதினா இலை,ரம்பை இலை,சீரகவெந்தயப்பொடி சேர்த்து கொதி வரவும் குக்கரை மூடி சிம்மில் 10-15 நிமிடம் வைத்து இறக்கவும்.


கஞ்சி வெந்ததும் மசித்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு வெங்காயம் வதக்கி ,அரைஸ்பூன் இஞ்சி பூண்டு ,கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கி கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் தேங்காய்ப்பால் சேர்த்து நுரை கூடி வரும்.

பின்பு தாளித்த தேங்காய்ப்பாலை ரெடி செய்த கஞ்சியில் சேர்த்து விடவும்.உப்பு சரி பார்த்து கொள்ளவும்.இந்த கஞ்சி சத்தானதும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும்.

சுவையான கமகமக்கும் சிம்பிள் நோன்பு கஞ்சி ரெடி.
இதற்கு புதினா அல்லது மல்லித்துவையல் அருமையாக இருக்கும்.

முருங்கைக்கீரை கஞ்சி :

மேலே குறிப்பிட்டபடி கஞ்சியை ரெடி செய்து கொள்ளவும்.
ஒரு குத்து முருங்கைக்கீரை, ,சிறிது நறுக்கிய வெங்காயம்,4 பல் பூண்டு ,கால்ஸ்பூன் சீரகம் ,1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ரெடி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் வெடித்து,வெங்காயம்,பூண்டு ,முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

ஏற்கனவே தயார் செய்த கஞ்சியை ஒரு பவுல் எடுத்து அதில் ரெடி செய்த கீரையை சேர்த்து கலந்து பரிமாறவும்.இந்த கஞ்சியை நிறைமாத கற்பிணிக்கு கூட கொடுக்கலாம்.மிகவும் சத்தானதும் ருசியானதும் ஆகும்.தனியாக கீரை கஞ்சி செய்ய அரிசி பாதி வெந்து வரும் பொழுது கீரை சேர்த்து மேற் சொன்னபடியும் கஞ்சி தயாரிக்கலாம்.அல்லது கஞ்சி ரெடியானபின்பு ரெடி கீரையை கலந்து பின்பும் பரிமாறலாம்.

சுவையான முருங்கைக்கீரை கஞ்சி ரெடி

பிஷ் கஞ்சி

மேலே குறிப்பிட்ட படி கஞ்சியை ரெடி செய்து கொள்ளவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு துண்டு முள் இல்லாத மீனை,உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து பின் பொரிக்கவும்.பொரித்த மீனை உதிர்த்து கொள்ளவும்.

மீன் பொரித்த அந்த கடாயில் நறுக்கிய வெங்காயம்,இரண்டு பல் பூண்டு ,மல்லி இலை வதக்கி பொரித்து உதிர்த்த மீனை போட்டு நன்கு வதக்கவும்.தேவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும்.

ஒரு பவுலில் ரெடி செய்த கஞ்சியை எடுக்கவும்.பொரித்து உதிர்த்து தயார் செய்த மீனை போட்டு கலந்து பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள பிஷ் கஞ்சி ரெடி.

நன்றி: -ஆசியா உமர்

பிரியாணி நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம்
அரிசி நொய் = 3 டம்ளர்
பச்ச பருப்பு = அரை டம்ளர்
வெங்காயம் = நான்கு
தக்காளி = முன்று
பச்ச மிளகாய் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = முன்று மேசை கரண்டி
கேரட் = இரண்டு
கொத்து மல்லி = அரை கைபிடி
புதினா கால் கைபிடி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
எண்ணை முன்று மேசை க‌ர‌ண்டி
டால்டா = ஒரு தேக்க‌ர‌ன்டி
ப‌ட்டை = ஒரு அங்குல‌ம் அள‌வு
கிராம்பு = முன்று
ஏல‌ம் = ஒன்று
தேங்காய பால் = அரை மூடி


செய்முறை

1. அரிசி நொய் (நொய் மிக்சியில் பொடிக்க முடியவில்லை என்றால் அரிசியை ஊறவைத்து கையால் பினைந்து உடைத்து விடவும்) மற்றும் பாசி பருப்பு (வருத்தது) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய வயகன்ற சட்டியில் ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீரை கொதிக்க விட்டு ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு குழைய வேக விடவும்.

3. கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும், வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். புதினா, கொத்து மல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும்.தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

4. இப்போது கீமாவை தனியாக தாளிக்கனும்.சட்டியை காயவைத்து எண்ணை + டால்டாவை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கி, வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு வாடை போனதும் கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்ச மிளகாயை போட்டு வதக்கி சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.

5. கேரட்டை பொடியாக அரிந்து சேர்த்து, கீமா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.பாதி வேகும் போடு தயிரை சேர்க்கவும்.கூட்டு ந‌ல்ல‌ வெந்து கிரிப்பாகி எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்கி விட‌வும்.

6. வெந்து கொண்டிருக்கும் அரிசியில் இந்த‌ க‌ல‌வையை சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து அடி பிடிக்காம‌ல் ந‌ன்கு கிள‌றி கொதிக்க‌ விட்டு க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி புதினா தூவி இர‌க்க‌வும்.

குறிப்பு:

இதே போல் சிக்க‌ன் கீமாவிலும் செய்ய‌லாம் இல்லை சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌னை பொடியாக‌ அரிந்து போட்டும் செய்ய‌லாம் அரிந்து போட்டு செய்யும் போது 400 கிராம் அள‌வு எடுத்து கொள்ள‌வும். க‌றி அதிக‌மா விரும்பாத‌வ‌ர்க‌ள் இதே அள‌வே போதும்.

வெஜிடேரியன்கள்வெஜ் க‌ஞ்சியும் இதே முறையில் க‌றி, சிக்க‌னுக்கு ப‌தில் (முட்டை கோஸ், கேர‌ட், பீன்ஸ், முழுபாசிப‌ருப்பு சிறிது சேர்த்து செய்ய‌லாம்)
ப‌ச்ச‌ ப‌ருப்புக்கு ப‌தில் க‌ட‌லை ப‌ருப்பும் போட‌லாம்.

இதே போல் லைட் ம‌சாலாவில் ப‌ச்ச‌மிளகாய் ம‌ட்டும் சேர்த்து ப‌ள்ளி வாச‌ல் க‌ஞ்சி போல் த‌யாரிக்க‌லாம்.


நோன்பு கஞ்சி மற்றொரு வகை

தேவையானவை:

அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை – கால் கப்
கொத்து கறி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும். எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும். பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண் பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது.


ஈசி ஓட்ஸ் நோன்பு கஞ்சி

தேவையான பொருள்கள்:
----------------------------------
ஓட்ஸ்-அரை கப்
தேங்காய் விழுது-1டீஸ்பூன்
மிக்ஸ் வெஜிடபில்-கால் கப்
இஞ்சி,பூண்டு-அரை டீஸ்பூன்(விழுது)
பூண்டு-3பல்வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
பச்சை மிளகாய்-இரண்டு
புதினா,கொத்த மல்லி-சிறிதளவு
எண்ணை-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்-அரை டீஸ்பூன்
கரம் மசாலா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை:
----------------
தக்காளி,வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணை விட்டு வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும் பின் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் எல்லாம் நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அதனுடன் அனைத்து தூள் களையும் சேர்த்து வதக்கவும் பின் தேங்காய் விழுது, வெஜிடபில்,உப்பு சேர்த்து கிளறவும் பிறகு அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் ஓட்ஸ் போட்டு கொதிக்க விடவும் எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்து வெஜிடபில் வெந்ததும் புதினா,மல்லி தூவி இறக்கவும். சுவையான ஓட்ஸ் நோன்பு கஞ்சி ரெடி.

அவசரமாக நோன்பு கஞ்சி செய்ய வேண்டும் என்றால் இப்படி ஓட்ஸ் வைத்து செய்யலாம் அரிசி வைத்து செய்தால் சீக்கிரம் வேகாது ஓட்ஸ் சீக்கிரம் வெந்து விடும் உடம்புக்கு நல்லதும் கூட ஓட்ஸ்.


ஆட்டுக்கறி நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி = 500 கிராம்
பூண்டு = 1 முழுபூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 2
கேரட் = பாதி
தக்காளி = 2
சமையல் எண்ணை= 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சம் பழம் = 1
தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம்

சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:

1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாகஎடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு,மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும். நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவுதண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம்பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

No comments:

Post a Comment